Friday, August 2, 2019

‘சந்திரயான்-2’

நிலவுக்கு இந்தியா அனுப்பிய ‘சந்திரயான்-1’ விண்கலத்துக்கு ஒரு தசாப்தத்துக்குப் பிறகு அதன் தொடர்ச்சியான ‘சந்திரயான்-2’ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா ஒரு விண்கலத்தை நிலவின் மறுபக்கத்தில் முதன்முறையாக இறங்கச் செய்து வெற்றி கண்டது. தற்போது அதுபோன்ற வேறொரு முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டிருக்கிறது. ஆம், ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் பிரக்ஞான் உலாவியை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கச் செய்யும் முயற்சிதான் அது. நிலவு நடுக்கோட்டில்தான் இதுவரை உலவிகள் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது, இதுவரைக்கும் யாராலும் மேற்கொள்ளப்படாத முயற்சி என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஜிஎஸ்எல்வி மார்க்-3’ ஏவுகலத்தைக் கொண்டு முதன்முறையாக விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் மூலம் நான்கு டன் வரை அனுப்ப முடியும் என்பதைப் பார்க்கும்போது இந்த ஏவலே பெரும் சாதனைதான். சுற்றுப்பாதைக் கலம், தரையிறங்கு கலம் (விக்ரம்) உலாவி (பிரக்ஞான்) எல்லாம் சேர்த்து 3.87 டன் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. புவியின் நிலைநிறுத்தல் சுற்றுப்பாதையை அடைந்தவுடன் ‘சந்திரயான்-2’ கலத்தின் சுற்றுப்பாதை ஐந்து நிலைகளில் வரும் 22 நாட்களில் உயர்த்தப்படும். உச்ச எல்லையை அடைந்தவுடன் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடுவதற்கான திசைவேகத்தைப் பெற்று நிலவை நோக்கிய நீண்ட பயணத்தை ‘சந்திரயான்-2’ தொடங்கும். ஆகஸ்ட் 20 அன்று நிலவு ஈர்ப்புவிசையின் பிடிக்குள் ‘சந்திரயான்-2’ செல்லும். அடுத்த 13 நாட்களில் ‘சந்திரயான்-2’ சுற்றுப்பாதை பல்வேறு படிகளாகக் குறைந்துகொண்டே வந்து, நிலவின் தரையிலிருந்து 100 கிமீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றும். அடுத்த முக்கியமான கட்டம், சுற்றுப்பாதைக் கலத்திலிருந்து தரையிறங்கு கலத்தையும் உலாவியையும் பிரிப்பது. இதையடுத்து, தரையிறங்கு கலமும் உலாவியும் மென்முறை தரையிறங்குதலை செப்டம்பர் 7 அதிகாலையில் மேற்கொள்ளும்.
2008-ல் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-1’ விண்கலத்தின் நிலவு மோதல் துழாவியைப் போல வன்தரையிறங்குதலாக இல்லாமல், இந்த முறை முதன்முறையாக இஸ்ரோ மென்தரையிறங்குதலை முயன்றிருக்கிறது. மணிக்கு 6,000 கிமீ வேகத்தில் இறங்கும் விக்ரம் தரையிறங்கு கலத்தின் வேகத்தைக் குறைத்து, மெதுவாகத் தரையிறங்குவதற்கு அடுக்கடுக்கான வேகத்தடுப்பு இயங்குமுறைகள் தேவைப்படும். நிலவில் நீரின் இருப்பை ‘சந்திரயான்-1’ மூலம் கண்டறிந்தோம். தற்போதைய சுற்றுப்பாதைக் கலத்திலுள்ள அகச்சிவப்பு நிறமாலைமானியானது நீரின் இருப்பை உறுதிசெய்யும் தடயங்களைத் தேடும். கூடவே, நிலவின் வெப்பநிலை மாற்றம், நிலவு மேற்பரப்பின் வெப்பக் கடத்துதிறன், நிலவுநடுக்கம் போன்றவை முதல் முறையாக ஆராயப்படும். ‘சந்திரயான்-1’, ‘மங்கல்யான்’ போன்றவற்றின் வெற்றி இஸ்ரோவுக்கு மகத்தான புகழைத் தேடித்தந்திருக்கிறது. ‘சந்திரயான்-2’ வெற்றி விண்வெளித் திட்டங்களில் தொழில்நுட்பங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதில் மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Source:Tamil Hindu

செபியின் தன்னாட்சி நீடிப்பது அவசியம்

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) உபரி நிதியில் 75%-ஐ மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்த்துவிட நிதி மசோதாவில் வகைசெய்யப்பட்டிருக்கிறது; இந்த நிதி மிகவும் கணிசமானது அல்ல. இந்த நிதியைக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைக் குறைத்துவிட முடியாது. பிறகு ஏன் இந்த முயற்சி என்றால், ‘செபி’ அமைப்பைக் கட்டுக்குள் வைப்பதற்காகத்தான் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. ‘உபரி நிதியை மத்திய அரசு கேட்டுப் பெறுவதால் எங்கள் அமைப்பின் சுயேச்சையான செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும்’ என்று ‘செபி’ தலைவர் அஜய் தியாகி மத்திய அரசுக்கு ஜூலை 10-ல் கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், ‘செபி’ அமைப்பின் வருடாந்திர வரவு-செலவுகளுக்குப் பிறகு எஞ்சும் உபரி நிதியில் 25% தன்னுடைய கையிருப்பு நிதியுடன் சேர்த்துவிட்டு, எஞ்சிய 75%-ஐ மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்த்துவிட, நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ‘செபி’ தன்னுடைய மூலதனச் செலவுகளுக்கு மத்திய அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ‘செபி’ சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு ஒழுங்காற்று முகமை இப்படி தனது நிதித் தேவைக்காகவும் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும் அரசின் கையையும் ஒப்புதலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை வந்தால், அதனால் சுயேச்சையாகச் செயல்பட முடியாது. சட்டபூர்வமான அமைப்பான செபியின் சுதந்திரத்தில் அரசு கை வைப்பது ‘செபி’ அமைப்பை மட்டுமல்ல, அது கண்காணிக்கும் நிதிச் சந்தையையும் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பங்கு வெளியீட்டாளர்களையும் நிறுவனங்களையும் கண்காணிக்க வேண்டிய ‘செபி’ அமைப்பே இன்னொரு அமைப்புக்கு நேரடியாகக் கட்டுப்பட நேரும்போது அதனால் திறமையாகவும் நடுநிலையாகவும் செயல்படுவது கடினம்.

பங்குச் சந்தைகளில் நடைபெறும் தில்லுமுல்லுகளைத் தடுக்கவும் முதலீட்டாளர்களின் நலனைக் காக்கவும் பங்குச் சந்தை மீது நம்பகத்தன்மை அதிகரிக்கவும்தான் ‘செபி’ அமைப்பே உருவாக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியிடமும் நிதி அமைச்சகம் உபரி நிதியைக் கேட்டு, தொடர்ந்து வலியுறுத்துவதையும் இத்துடன் இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு முகமை ஆகியவற்றின் சுதந்திரத் தன்மையை மதிக்காமல், அவை அரசுக்குக் கட்டுப்பட்டவைதான் என்பதை நிலைநாட்டும் முயற்சிகளாகவும் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது. செபி போன்ற அமைப்புகளுக்கு முழு அதிகாரத்தை அளிக்க வேண்டும், அதேசமயம் அவற்றின் சொத்துகள், உபரி நிதி போன்றவற்றை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, இத்தகு அமைப்புகளின் அதிகாரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டால் கூடுதல் நிர்வாகத்துக்கு உதவும் என்று அரசு நினைத்தால் அம்முயற்சி பெரும் ஆபத்தில்தான் போய் முடியும்.

Source: Tamil Hindu

தடுமாறுகிறதா சீனப் பொருளாதாரம்?

குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் அதிக அளவிலான ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலம் செழித்துக்கொண்டிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில், சீனாவின் பொருளாதாரம் 6.2% மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. 27 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி இது என்பதுதான் இந்தத் தரவை முக்கியத்துவப்படுத்துகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% ஆகவும், 2018 முழுவதுமாக 6.6% ஆகவும் வளர்ச்சி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

தற்போதைய மந்தத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போய்க்கொண்டிருக்கும் வர்த்தகப் போர் காரணமாக ஜூன் மாதம் ஏற்பட்ட மந்தநிலை முதல் காரணம். அடுத்ததாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கைக் குறைவு காரணமாகக் கட்டிடத் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவு. வருகிற காலாண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் பெரும்பாலான பொருளியலாளர்கள் கருதுகிறார்கள்.

வளர்ச்சி தடுமாறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதிக ஏற்றுமதி வரிகள் காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் சீன ஏற்றுமதியை உள்நாட்டுத் தேவைகள் ஈடுகட்டிக்கொண்டிருக்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால், ஏற்றுமதியையே சீனா பெரிதும் நம்பியிருப்பதாலும், அமெரிக்காவுடனான அதன் வர்த்தகப் போருக்கு முடிவு ஏதும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரியவில்லை என்பதாலும், சீனாவின் வளர்ச்சி மீதான நெருக்கடி இன்னும் சில காலத்துக்கு இருக்கவே செய்யும்.

சீனாவின் முன் பெரிய சவால்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது சீனப் பொருளாதாரத்தையே மறுகட்டமைப்பு செய்வது. அரசை மையப்படுத்திய முதலீடுகள், ஏற்றுமதிகள் போன்றவற்றிலிருந்து சந்தைமையப்படுத்தியதாகப் பொருளாதாரம் மாற வேண்டும். பொருளாதாரத்தில் சீன வளர்ச்சியின் வசந்த காலம் அந்த அரசால் தாராளமாகக் கொடுக்கப்பட்ட நிதியாலும் மாபெரும் தொழிலாளர் திரளாலும், குறிப்பாக குறைந்த ஊதியத்துக்கு உழைப்பைச் செலுத்திய அந்தத் திரளாலும், சாத்தியமானது. இதனால்தான், ஏற்றுமதியில் உலக அளவில் பெரும் சாம்ராஜ்யமாக சீனா உருவெடுத்திருந்தது.

வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட சீனாவின் வளர்ச்சி மாதிரியானது, தடம் மாறி முதலீடுகளும் வற்றிப்போன நிலையில், சீனாவானது இதைவிட நீடிப்புத்தன்மை கொண்ட ஒரு மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால், எதிர்காலத்தில் சீனா உருவாக்க உத்தேசித்திருக்கும் இரட்டை இலக்க வளர்ச்சி குறித்த நம்பிக்கைகளை இழக்க நேரிடும்.

தற்போது சீன அதிகாரத் தரப்பானது இந்தப் பிரச்சினையை ஆழமாக நோக்கி எந்த மாற்றங்களையும் செய்யும் முனைப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. பெரிய அளவிலான பொருளாதார மாற்றங்களைக்கூட செய்யத் தேவையில்லை. ஆனால், உள்நாட்டு நுகர்வை அதிகப்படுத்தாமலும் ஏற்றுமதியை அளவுக்கதிகமாக நம்பியும் இருந்தால் சீனாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடரவே செய்யும்.

Source:Tamil Hindu

Saturday, March 24, 2018

நடந்தாய் வாழி காவிரி...

நீண்ட நாட்களாக நடந்த, காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு, பல்வேறு விவாதங்களுக்கு தீர்வாகும்.முதலாவதாக, இனி, காவிரி நீர்ப் பங்கீடு விஷயத்தில், 'காவிரி தேசிய நதி; இதில், எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாடுவதற்கு இல்லை' என்பது, சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ அடிகளின், 'நடந்தாய் வாழி காவிரி' என்ற, வாசகத்தை மெய்ப்பித்திருக்கிறது.ஏனெனில், முந்தைய கால மைசூர் மன்னருடன் மேற்கொண்ட ஒப்பந்தம், அதற்குப் பின், 1991ல், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, 2016ல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட பின் எழுந்த அமளி, பதற்றம் ஆகியவை, இனி குறையலாம்.தவிரவும், காவிரியில், இனி புதிய அணைகள் கட்ட தடை வந்தது, தமிழகத்திற்கு நல்லது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, காவிரியில் வழக்கமாக வரும் தண்ணீர் அளவு, கர்நாடக மாநிலத்தின் தேவை, தமிழகத்தின் தேவை ஆகியவை முறையே நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழக்கறிஞர்கள் நடத்திய வாதங்கள் என்று, பல்வேறு ஆவணங்களுடன் கூடிய தகவல்கள் ஆதாரம் ஆக்கப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே அளித்த உத்தரவுப்படி, 10 மாதத்தில், ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு விட வேண்டும் என்பது, தற்போது, 177.25 டி.எம்.சி., என, அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்திற்கு, 284.75 டி.எம்.சி.,யும், கேரளாவிற்கு, 30 டி.எம்.சி.,யும், புதுச்சேரிக்கு, 7 டி.எம்.சி.,யும் தண்ணீர் கிடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை, லோக்சபா அனுமதி பெற்று அறிவிக்க வேண்டியதில்லை. இதற்கு சில முன்னுதாரணங்கள் உள்ளன. மத்திய அரசு, இம்மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு பலன் எளிதாக கிடைக்கும்.தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பதால், 10 டி.எம்.சி., அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில், மாண்டியா உட்பட பல இடங்களில், இந்த வாய்ப்பு இல்லை. தவிரவும், பெங்களூரு நகருக்கு குடிநீராக, 4 டி.எம்.சி., காவிரி நீர் தரப்படுகிறது.பொதுவாக, காவிரி நீர், டெல்டா விவசாயத்திற்கு மட்டும் இன்றி, 10க்கும் மேற்பட்ட நம் மாவட்டங்களுக்கு, தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது. சென்ற ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு, மேட்டூர் அணை வறண்டதும், டெல்டாவில் பசும்பயிர் இல்லாமல் தரிசாக இருந்ததும், அதை முன்னிட்டு, டில்லி வரை விவசாயிகள் சென்று போராடியதையும் அறிவோம்.இந்தத் தீர்ப்பை, காவிரி டெல்டா பற்றிய, அதிக விபரங்களை அறிந்த, விவசாயி ரெங்கநாதன் மற்றும் செல்லச்சாமி தலைமையிலான விவசாய சங்கம் வரவேற்றிருப்பது சிந்திக்கத்தக்கது.எப்படி , 20 ஆண்டுகளில் கர்நாடகம் காவிரிப் பகுதியில், அதிக பாசனப் பரப்பை ஏற்படுத்தியதோ, அந்த மாதிரி தமிழகத்தில் டெல்டா பகுதிகளில், ஓரளவு அதிகமாக பாசனப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது. நெல் பயிரிட்டால், ஒரு கிலோ விளைய, 70 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பம்புசெட்டுகள் பயன்பாடு மூலம், அதிக அளவு மேல்மட்ட தண்ணீரையும் உறிஞ்சி இருக்கிறோம். அதிக அளவு யூரியா போன்ற உர உப்புகள், மண்ணின் சத்துக்களை பாதித்திருக்கின்றன.காவிரி டெல்டா விவசாயத்தில் நீர் மேலாண்மை, அதிக அளவு விவசாயத் தொழிலாளர்கள் இல்லாத வழிமுறைகள் தேவை என்ற கருத்தை, வேளாண் விஞ்ஞானி, சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தவிரவும், 110 நாளுக்குள், கதிர் அறுவடை ஆகும் புதிய நெல் வகை, மாற்றுப் பயிர் விவசாயம் என்ற பல புதிய அணுகுமுறைகள்.இவற்றை அமல்படுத்தினால், பயிர்க் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகள் அதிகம் பயனடையலாம். தவிரவும், மத்திய அரசின் அதிக பட்ச ஆதரவு விலை, நடைமுறைக்கு வந்தால், விவசாயிகள் துயர் குறையும்.இதுவரை, தி.மு.க., அரசு மேற்கொண்ட அணுகுமுறைகளைத் தாண்டி, அ.தி.மு.க., சில விஷயங்களை, நீதிமன்றம் வரை கொண்டு சென்றிருக்கிறது என்ற அரசின் கருத்தை மறுப்பதற்கு இல்லை. முதலில், தற்போது அறிவிக்கப்பட்ட தண்ணீர், தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வழி தேவை. சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடக அரசு, இத்தீர்ப்பை வரவேற்றிருப்பதும், பின்னணியாக குறிப்பிடத்தக்கது. ஆனால், மழை வஞ்சிக்கும் காலங்களில் எப்படி பகிர்ந்து கொள்வது, அதிக வெள்ளம் வரும் போது, அதை வீணாக்காமல் இருப்பதும் முக்கியமானது. தமிழக கட்சிகள், அரசியலில் முகம் காட்ட நினைக்கும் நடிகர்கள் ஆகியோர், தீர்ப்பை எதிர்த்துள்ளனர். இந்த வாதங்களில் ஏற்படும் தெளிவுகள், டெல்டா விவசாயிகளை காப்பாற்ற உதவட்டும்.


Source:Dinamalar

கவுரவமாக சாக அனுமதி...

மிகவும் கொடிய அளவில் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாதவர்கள் இனி, 'கருணைக் கொலை' என்ற முறையில் உயிரை முடித்துக் கொள்ள, சுப்ரீம் கோர்ட் அனுமதித்திருக்கிறது.வாழ்வதை, 'ஒருவரது அடிப்படை உரிமை' என்று, அரசியல் சாசனம் சட்டப்பிரிவு, 21 வரையறை செய்திருப்பதுடன், அதை, 'கவுரவமாக வாழ்வது வாழ்க்கை' என, குறிப்பிட்டிருக்கிறது.
ஒரு நபர், நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு சென்றால், அவரை அந்நோயில் இருந்து மீட்டு, காப்பாற்ற வேண்டிய செயல், டாக்டர் உடையதாகிறது. டாக்டர்கள் படிப்பில் உள்ள உறுதி மொழியும் வலியுறுத்துகிறது.
'வாழும் உரிமை' ஒருவருக்கு இருப்பது போல, 'சாகும் உரிமை' ஒருவருக்கு உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது.'எந்த முயற்சி செய்தாலும் காப்பாற்ற முடியாது' எனும் போது, நினைவிழந்த நிலையில், அந்த நோயாளிக்கு ஊசி செலுத்தி, முடிவை எட்டச் செய்யும் நடைமுறை, 'ஆக்டீவ் யுதேனிசியா' என்றும், மருத்துவ உபகரணங்கள் மூலம் மூச்சைக் காக்கும் போது, அந்த உபகரணங்களை பிடுங்கி உயிரற்றதாக்கும் முறைக்கு, 'பாசிவ் யுதேனிசியா' என்றும் விளக்கப்படுகிறது.
மரணதண்டனை பெற்றவர்களுக்கு கூட, விஷ ஊசி செலுத்தி, உயிரைப் பறிக்க அனுமதிக்காத நம்நாடு, 'ஆக்டீவ்' நடைமுறையை என்றுமே ஏற்கவில்லை. தற்போது, தலைமை நீதிபதி, தீபக் சர்மா தலைமையில் ஆன, ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
தலைமை நீதிபதி தீபக் சர்மா தெளிவாக, 'சோதனைக் களத்திற்கு பாதிக்கப்பட்ட உடல் என்ன, 'கினியாபிக்' போன்ற சோதனைக்கான மிருகமா...' என்றிருக்கிறார். அது மட்டுமல்ல, வாழ்வில் எத்தனையோ தொழில்நுட்ப பாதிப்புகள், மற்ற பிரச்னைகள் வந்து ஊடாடுகின்றன. அதில் இருந்து ஒரு மனிதன் தன் முடிவை தேர்வு செய்வதற்கு, அவனுக்கு உரிமையில்லையா என்ற தத்துவ கேள்வி இத்தீர்ப்பில் அடங்கியிருக்கிறது.
பொதுவாக, இதிகாச புராணம் படித்தவர்கள், அம்பு படுக்கையில் படுத்த பீஷ்மர், அந்த தொந்தரவுகளுடன் தன் இறப்பு தேதியை முடிவு செய்தார். அதே போல, மார்க்கண்டேயன் தன் வாழ்வை, வேறுவிதமாக நீட்டித்துக் கொண்டார்.
இன்றும், ஜைனத் துறவிகள், உணவு அளவைப் படிப்படியாக குறைத்து, உண்ணாமல் இருந்து மரணத்தை தழுவுகின்றனர். இவை, இன்றைய வாழ்க்கை முறை, மருத்துவ வசதிகளுக்கு உகந்த கருத்தாகாது.ஆனால், அரசு இதற்கேற்ற சட்டம் இயற்றி அமல் ஆகும்போது, எப்படி இப்போது மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்பட்டு, அவர்கள் மீண்டு வரும் விஷயம் போல, பல விளக்கங்கள் வரலாம்.
கால் துண்டிக்கப்பட்ட நோயாளியின் வசதிக்கு, துண்டிக்கப்பட்ட காலே தலையணையாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை தொடரும் போதே, பல்வேறு சிக்கல்கள் வந்து, மாரடைப்பு ஏற்பட்டு பலர் இறப்பதும் செய்தியாகிறது.பொதுவாக, மிகப்பெரிய வசதி வாய்ந்த நவீன மருத்துவமனைகளில், இந்த நடைமுறை எளிதாக வரலாம். அதுவும், தகுதிவாய்ந்த உடலியக்கத்துடன் வாழ முடியாமல், புற்றுநோயின் கடைசி கட்ட பாதிப்பு, மற்ற சில நோய்களில், வலி நிவாரணம் காண முடியாத, தவிப்பு போன்ற பாதிப்புகளில் உள்ள நோயாளிகள், 'வெண்டிலேட்டர்' மற்றும் சிறப்பு சிகிச்சை வார்டுகளில், எந்த நேரமும் உயிர் பிரியும் சூழ்நிலையில், நாள் பலவற்றை எண்ணும் துரதிர்ஷ்டம் ஏற்படுகிறது.
இப்படி அந்த குறிப்பிட்ட நோயாளியைக் காக்க, பணத்தை வாரியிறைக்க தகுதியும் தேவை. ஆனால், நாளுக்கு நாள் மருத்துவ வசதி அதிகரிக்கும், 21ம் நுாற்றாண்டுக்கு, ஏற்ற நல்ல துவக்கம் இத்தீர்ப்பு.அதுவும், தீர்க்க முடியாத நோய்களுக்கு, 'ஸ்டெம் செல்' சிகிச்சை போன்றவை அதிகரிக்கும் காலத்தில், டாக்டர்கள் எடுக்கும் கடைசி உத்திகளை புரிந்து கொள்ளும் வாய்ப்பும், அதற்கான மருந்து மற்றும் மருத்துவ சோதனைகள் ஏற்படுத்தும் செலவினம் ஆகியவற்றை கணக்கிடுவது, இனி முக்கியத்துவம் பெறும்; பல்வேறு விஷயங்களுக்கு, தீர்வாக உதவிடும்.
அதே போல சொத்துப் பங்கீடு அல்லது வேறு காரணங்களுக்காக இப்போது, உயிரை இழுத்து வைத்து, கடைசியில், 'வெண்டிலேட்டரை அகற்றி' மூச்சை நிறுத்துவதை, முடிவு செய்யும் உறவினர் சுபாவத்திலும் மாற்றம் வரலாம்.
ஏழு ஆண்டுகளாக விவாத களத்தில் இருந்த ஒரு விஷயம், முடிவுக்கு வந்தது, வரவேற்கத்தக்கது. போதிய மருத்துவ வசதிக்கான அதிக காப்பீடு பற்றி அரசு முயற்சிக்கும் காலத்தில், இத்தீர்ப்பு, நமது சமுதாயத்தில் சிலர், மேல்நாடுகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப எளிதான சட்ட நடைமுறைகளுடன் வாழலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

Source:Dinamalar

Friday, November 10, 2017

பொருளாதார மீட்சிக்கு புதிய உத்தி உதவுமா?



மந்த நிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு இருமுனை உத்தியை வகுத்திருக்கிறது. அரசுத் துறை வங்கிகளுக்குப் பெருமளவுக்கு முதலீட்டை வழங்கும் உத்தியுடன், மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது. இவ்விரண்டும் அடித்தளக் கட்டமைப்புகளுக்கான செலவை அதிகப்படுத்தி வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், வங்கித் துறையின் வாராக்கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு ஏன் மூன்று ஆண்டுகள் காத்திருந்தது என்பது விளங்கவில்லை.

83,677 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.7 லட்சம் கோடியைச் செலவிட மத்திய அரசு திட்டமிடப்பட்டிருக் கிறது. இந்தச் சாலை நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எல்லைப்புறங்கள், பழங்குடிகள் – மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள், இதுவரை சாலைப் போக்குவரத்துடன் இணைக்கப்படாத தொலைதூரப் பகுதிகளில் அமையவிருக்கிறது. 2022 மார்ச் வரையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும். ‘பாரத் மாலா பரியோஜனா’ என்ற இந்தத் திட்டம் மூலம், நேரடியாக 14.2 கோடி மனிதஉழைப்பு நாட்கள் உருவாக்கப்படும். இந்த திட்டம் உத்தேசிக்கப்பட்டபடி, கடலோரப் பகுதிகளையும் தேசிய நெடுஞ்சாலைகளையும், 550 மாவட்டங்களையும் இணைத் தால் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும். அதன் பலன்களை இவ்வளவென்று ரூபாயில் அளந்து சொல்ல முடியாவிட்டாலும், ஜிடிபிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்யும் என்கிறார் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.

பாரத்மாலா திட்டத்துக்கு மொத்தம் ரூ.5.35 லட்சம் கோடி தேவை. அதில் ரூ.2.09 லட்சம் கோடி சந்தையில் கடன்கள் மூலம் திரட்டப்படும். ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் தனியார் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அடித்தளக் கட்டமைப்புப் பணிகளை ஒப்பந்த முறையில் செய்யத் தொடங்கி, தொடர முடியாமல் திணறிவரும் தனியார் நிறுவனங்கள் புதிய சாலைத் திட்டத்தில் இறங்க அரசிடமிருந்து தெளிவான வழிகாட்டலைப் பெற விரும்பும். அரசும் தனியாரும் இணைந்து மேற்கொள்ளும் பொது திட்டங்களுக்கு (பிபிபி) எப்படிப் புத்துயிர் ஊட்டலாம் என்று பரிந்துரைக்க முன்னாள் நிதித்துறைச் செயலர் விஜய் கேல்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கிடப்பில் உள்ள அந்தப் பரிந்துரைகளை தூசுதட்டி எடுத்து அமல்படுத்த வேண்டும்.

அரசு – தனியார் இணைந்து செயல்படுத்த வேண்டிய பிபிபி திட்டங்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டிலேயே ரூ.500 கோடி ஒதுக்கியிருந்தும் அது பயன்படுத்தப்படவில்லை. பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தனியார்கள் ஓடிவிட்டனர். அரசு இதற்காக ஏற்படுத்த உத்தேசித்த நிறுவனம் இன்னமும் உருவாகவில்லை. தொழில் திட்டங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாண்டில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்குப் பெருமளவில் எதிர்ப்பு எழுந்த தால் அதுவும் கைவிடப்பட்டுவிட்டது. அடித்தளக் கட்டமைப்பு திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்றால் இவ்விரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும்.


Source:Tamil Hindu

Saturday, October 28, 2017

காஷ்மீர் அமைதி முயற்சிக்கு அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம்!



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப, மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. காஷ்மீர் முதல்வராக இருந்த முஃப்தி முகம்மது சய்யீத் 2016 ஜனவரியில் மரணம் அடைந்தது முதல் மாநிலம் அமைதியின்றிக் காணப்படுகிறது. பிரிவினை கோருபவர்களுடன் பேச முடியாது என்று இதுநாள் வரை கூறிவந்த மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இப்போதாவது மாற்றிக்கொண்டிருப்பது நல்ல விஷயம்.

காஷ்மீரில் அமைதி ஏற்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பிடிபி) வாக்குறுதி அளித்திருந்தது. வாக்குறுதியை நிறைவேற்ற என்னென்ன முயற்சிகளை காஷ்மீர் அரசு எடுக்கும் என்று பார்க்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் நடப்பதை உறுதி செய்வது முதல்வர் மெஹ்பூபா முஃப்திக்குப் பெரும் சவால்.

அத்துடன், சம்பந்தப்பட்ட எல்லா தரப்புடனும் பேச எந்த அளவுக்கு தினேஷ்வர் சர்மாவுக்கு சுதந்திரம் தரப்படவிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பிரிவினைவாதிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்தில் நடத்தியுள்ள திடீர் சோதனைகள், பேச்சுவார்த்தைகளில் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் பங்கேற்பைக்கூட பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. மக்களிடையே செல்வாக்கு கொண்ட ஹுரியத்தின் கருத்துக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை அரசு உணர்ந்துகொள்வது அவசியம்.

மெஹ்பூபா முஃப்தி 2016 ஏப்ரலில் முதல்வராகப் பதவியேற்றார். மத்திய அரசை எதிர்க்கும் வகையில் பிரிவினை ஆதரவாளர்கள் ஸ்ரீநகர் வீதிகளில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள்; பதிலடியாகப் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை நிரப்பிய துப்பாக்கிகளால் சுட்டனர். அவ்விரு நிகழ்வுகளுக்கு முன்னதாகவே சமரசத் தூதர் வந்து பேச்சைத் தொடங்கியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகப் போயிருக்காது. புர்ஹான் வானி போன்றோர் கொல்லப்பட்ட போது மக்களிடையே அவர்கள் மீது அனுதாபமும் மத்திய அரசு மீது கோபமும் கொப்பளித்தன. இந்நிலையில், தினேஷ்வர் சர்மா, காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் செல்வது மிக மிகத் தாமதமான பயணம் என்றே கூற வேண்டும்.

எல்லைக்கு அப்பாலிருந்து பீரங்கிகளால் சுடப்படுவது அதிகரித்ததால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்தது. காஷ்மீர் மாநிலப் போலீஸார் மீது எல்லைக்கு அப்பாலிருந்த தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் தொடுத்தனர். இந்த நிகழ்வுகளால் காஷ்மீரில் அமைதி குலைந்தது. 2013-க்குப் பிறகு புதிய தலைமுறை இளைஞர்கள் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தனர். அவர்களுடைய எண்ணிக்கை குறைந்தபட்சம் 200 ஆக இருக்கும் என்கின்றன பாதுகாப்புப் படை வட்டாரங்கள். இந்நிலையில், மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் தினேஷ்வர் சர்மா எல்லாத் தரப்பினருடனும் பேச அனுமதிக்கப்பட வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கு அது இன்றியமையாத விஷயமாகும்!

Source:The Hindu Tamil